ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பெரும்பாலான முதல்வர்கள் ஆதரவு தெரிவித்ததாக மோடி அறிவிப்பு!

 

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பெரும்பாலான முதல்வர்கள் ஆதரவு தெரிவித்ததாக மோடி அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான மாநில முதலமைச்சரகள் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசு பொது முடக்கத்தை நீட்டிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

tt

பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஒடிஷா, பீகார், குஜராத், ஹரியானா ஆகிய 9 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மட்டும் இன்றை கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.  பிற மாநில முதலமைச்சர்கள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பிரதமர் அலுவலகத்திடம் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். பிரதமருடன் பேச வாய்ப்பு கிடைத்த 9 முதல்வர்களில், நான்கு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததாக கூறப்படுகிறது. 

tt

குறிப்பாக ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பொது முடக்கம் காரணமாகவே நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த நேரத்தில் தளர்த்தும் முடிவை மேற்கொண்டால், இத்தனை நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும் என கூறியுள்ளார். நோய் தொற்று அதிகம் உள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேச மாநில முதல்வர்களும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என விரும்புவதாக தெரியவந்திருக்கிறது. தமிழக முதலமைச்சரும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாநில முதல்வர்கள் கூறிய கருத்துகள், எழுதிய அனுப்பிய கடிதங்கள் ஆகியவற்றை பரிசீலித்து அதன் அடிப்படையில் பிரதமர் முடிவை வெளியிடுவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான முதல்வர்கள் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருப்பதால், மூன்றாவது முறையாக சில வாரங்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.