உலக வங்கியின் தலைவராகிறார் இந்தியர்?

 

உலக வங்கியின் தலைவராகிறார் இந்தியர்?

உலக வங்கியின் தலைவராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்திரா நூயியை தேர்ந்தெடுக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்திரா நூயியை தேர்ந்தெடுப்பதற்கு அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளில் இருக்கும் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் உலக வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியா உட்பட 189 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த வங்கியின் தலைமையகம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ளது. இதன் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், ஜனவரி மாத இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 

இதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் கருவூல செயலர் ஸ்டீவன், தற்காலிக தலைவர் மிக் முன்ல்வனே மற்றும் இவாங்கா ட்ரம்ப் ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டு வருவதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. 

இந்நிலையில், உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்திரா நூயியை (63) முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திரா நுயியை முன்னிறுத்த இவாங்கா ட்ரம்ப் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்திரா நூயி, சென்னையில் பிறந்தவர்.பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்த இவர் கடந்த ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து பதவி விலகினார். இதற்கிடையே இவாங்கா ட்ரம்ப் உலக வங்கியின் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.