உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு: ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்து வைப்பு

 

உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு: ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்து வைப்பு

உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது

சென்னை: உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் மெய்யபுரம் கிராமத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒருசில வழித்தடங்களில் ஊர்வலம் செல்ல தடை இருப்பதை சுட்டிக்காட்டிய காவல்துறையினரிடம் ராஜா வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக அவர் விமர்சித்தார்.

இதையடுத்து, ஹெச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.