உத்திரகோசமங்கையில் புதிய சந்தனகாப்பு அலங்காரத்தில் மரகத நடராஜர்

 

உத்திரகோசமங்கையில் புதிய சந்தனகாப்பு அலங்காரத்தில் மரகத நடராஜர்

உத்திரகோசமங்கை கோயிலில் புதிய சந்தனகாப்பு பூசப்பட்ட நிலையில் மின்னும் நடராஜர் சிலை.

ராமநாதபுரம் : 

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல்வேறு ஸ்தலங்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திர கோச மங்கை  திருத்தலம் ஆகும் . உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வேறு எங்கும் காண முடியாத வகையிலான 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

uththirkosamangai temple

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மரகத நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் காணப்படும் . இந்த மரகத நடராஜரின் சிலையினை  மார்கழி திருவாதிரை தினத்தன்று மட்டும் சந்தனக் காப்பு களையப்பட்ட நிலையில் மரகத மேனியாக தரிசனம் செய்யலாம். 

இந்தாண்டிற்கான  மார்கழி திருவாதிரை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது .இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சந்தனகாப்பு களையப்பட்டது . 

அதனையடுத்து முதலில் அபூர்வ மரகத நடராஜருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், பன்னீர், சந்தனம்,பாசிப்பயறு மாவு, தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று அதனையடுத்து சந்தனாதி தைலம் பூசப்பட்டது.

அதனை தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக மரகத நடராஜர் சிலை வைக்கப்பட்டு மீண்டும் ஒருமுறை  இரவு 11.30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது.

natarajar

அதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனத்தன்று மீண்டும் புதிய சந்தனம் சுவாமியின் திருமேனியில் பூசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர்பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்த ஆருத்ரா தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்தனர் .

இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான ஊழியர்களும்  மாவட்ட நிர்வாக உழியர்களும் இனைந்து செய்து இருந்தனர்.