உண்மையில் இருக்கிறானா பனிமனிதன்? இமயமலையில் காலடித்தடத்தை கண்டதாக ராணுவம் ட்வீட்!
இமயமலை பிரதேசமான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிப்பதாக கூறப்படும் எட்டி எனும் பனிமனிதன், புராணங்களில் குறிப்பிட்டுள்ள வால் இல்லா குரங்கு அல்லது மறைந்து வாழும் பிராணி எனவும், நீளமான கருமையான முடியுடன் சூழப்பட்டு அவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது
புதுதில்லி: நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ‘எட்டி’ எனப்படும் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது.
எட்டி எனப்படும் பனிமனிதன் குறித்த நம்பிக்கைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. சீனாவின் வசித்த ஜாங் ஜியான்சிங் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக காடுகளில் அலைந்து திரிந்து ஆராய்ச்சி மேற்கொண்டவர். அதேபோல், நேபாள மக்களும் பனிமனிதன் தொடர்பான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் அந்த மனிதர்களைக் கண்டுள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இமயமலை பிரதேசமான நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் வசிப்பதாக கூறப்படும் எட்டி எனும் பனிமனிதன், புராணங்களில் குறிப்பிட்டுள்ள வால் இல்லா குரங்கு அல்லது மறைந்து வாழும் பிராணி எனவும், நீளமான கருமையான முடியுடன் சூழப்பட்டு அவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
உயர் அட்சரேகையில் வாழும் லங்கூர் குரங்கு, திபெத்திய நீல கரடி, இமயமலை பழுப்பு அல்லது சிவப்பு கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை சுட்டிக் காட்டி அதனை எட்டி என சிலர் தவறாக கூறுகின்றனர் என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது. எட்டியை உண்மையில் மனித துறவி என்றும் சிலர் பரிந்துரைத்துள்ளனர். எட்டி என்பது உண்மையில் ஆபத்தை உண்டாக்கும் இமாலயப் பழுப்பு நிற கரடி, இதனால் நிமிர்ந்தும் அல்லது நான்கு கால்களாலும் நடக்க முடியும் என எட்டியை நேருக்கு நேர் கண்டதாக கூறப்படும் மலையேறும் நபரான ரேனிஹால்ட் என்பவர் ‘மை குவெஸ்ட்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பனிமனிதன் முடி, பாதம் எலும்புகள் என சொல்லப்படுபவை, உண்மையில் மனிதர்கள், குரங்குகள், கரடிகளின் எலும்புகள், முடிகள், காலடித் தடங்கள் என அறிஞர்கள் கூறுகின்றனர். அறிவியல் சார்ந்த சமூகத்தில் செவி வழிக்கதையாக உள்ள எட்டி பற்றிய ஆதாரங்கள் குறைவாக உள்ள நிலையில், நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ‘எட்டி’ எனப்படும் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது.
இதுகுறித்த ட்விட்டர் பதிவில், “கடந்த 9-ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்த போது மாகலு ராணுவ முகாமின் அருகே 32 இன்ச் நீளமும் 15 இன்ச் அகலமும் கொண்ட பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாகவும், இதற்கு முன்னதாக மாகலு – பரூண் தேசியப் பூங்கா அருகே இதேபோன்று பனிமனிதன் காணப்பட்டதாகவும்” கூறப்பட்டுள்ளது.
For the first time, an #IndianArmy Moutaineering Expedition Team has sited Mysterious Footprints of mythical beast ‘Yeti’ measuring 32×15 inches close to Makalu Base Camp on 09 April 2019. This elusive snowman has only been sighted at Makalu-Barun National Park in the past. pic.twitter.com/AMD4MYIgV7
— ADG PI – INDIAN ARMY (@adgpi) April 29, 2019
நிரூபிக்கப்படாத பல்வேறு தகவல்கள் பனிமனிதனைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சூழலில், ஒற்றை காலடித் தடம் கொண்ட புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ள இந்திய ராணுவத்தின் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இவ்வாறாக பதிவிட்டு விட்டனர் என பலரும் அதனை கிண்டல் அடித்து வருகின்றனர்.