உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: டிடிவி தினகரன் தரப்பு அதிரடி

 

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: டிடிவி தினகரன் தரப்பு அதிரடி

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.

அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள், மதுரையில் நேற்று தினகரன் தலைமையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன், “தகுதிநீக்கம் சரியானது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கும் பொழுது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் எதிர்கொள்ள தயார்.

வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், அங்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.