உங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்?

 

உங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்?

இந்து மதத்தில் நிறைய கடவுள்கள் இருந்தாலும், விநாயகரை யாருக்குத் தான் பிடிக்காது. நாம் குழந்தையாக இருக்கும் போதே நம் மனதை தன் வடிவத்தினால் கவர்ந்து விடுகிறார் பிள்ளையார். அனைவருக்கும் பிடித்த, எங்கும் தென்படும் வினை தீர்க்கும் விநாயகரை நாம் எளிதில் வழிபடும் வகையில், குளத்துக் கரை, தெருவோரம் என எங்கும் நிறைந்திருக்கிறார். எண்ணற்ற வடிவங்களில் பக்தர்களுக்குப் பிடித்த மாதிரி செல்லப்பிள்ளையாராக கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டோ, ராக்கெட் ஏவுகிற மாதிரியோ விநாயகர் சதுர்த்தி நாளில் விதவிதமான வடிவங்களில் செய்து பக்தர்கள் மகிழ்கிறார்கள். வடிவங்களில் விநாயகர் வேறுபட்டாலும், ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்ற, வணங்கத்தக்க பிள்ளையார் இருக்கிறார். எந்த ராசியினர் எந்த பெயரில், வடிவத்தில் இருக்கும் விநாயகரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது என்பதை இங்கு பார்ப்போம்…

1. மேஷம் ராசி:
மேஷ ராசியினருக்கு செவ்வாய் ராசி நாதனாக இருக்கிறது. மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’யை வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கும். 
2. ரிஷபம்:
சுக்கிரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்டவர் ரிஷபம் ராசியினர். அதனால்,  ரிஷப ராசியினர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ‘ ஸ்ரீ வித்யா கணபதி’ யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும். 
3. மிதுனம்:
புதன் ராசி நாதனாக இருக்கும் ராசி மிதுனம்.  பல திறமைகளை அவர்களுக்குள் வைத்திருக்கும் மிதுன ராசியினர் ‘லட்சுமி கணபதி’ யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும். 
4.கடகம்:
சந்திரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்ட, பல கலைகளில் வித்தகராகத் திகழும் கடக ராசியினர், ‘ ஹேரம்ப கணபதி’ யை வணங்குதல் நல்லது. 
5. சிம்மம்:
இயற்கையிலேயே மிகவும் தைரிய குணம் கொண்டவர்கள் சிம்ம ராசி நேயர்கள். இவர்கள் எல்லா துறைகளிலும்  ஆளுமை மிக்கவர்கள். இவர்கள் தொடர்ந்து ‘விஜய கணபதி’ யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் ஜெயம் தான். 
6. கன்னி :
புதன் ராசி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் தனது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து செயல்பட்டால் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு உயர வாய்ப்புண்டு. இவர்கள் ‘மோகன கணபதி’ யை வழிபட வாழ்க்கை சிறப்பாகும். 
7. துலாம் :
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசியினர், பரந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’ யை வணங்கினால் நல்லது. 
8. விருச்சிகம் :
விருச்சிக ராசிக்கு செவ்வாய் ராசி நாதனாக உள்ளார். சுறுசுறுப்பான, நுண்ணறிவோடு செயல்படக்கூடிய விருச்சிக ராசியினர் ‘சக்தி விநாயகர்’ வழிபட்டு வர எல்லா நலனும் கிடைக்கும். 
9. தனுசு :

குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், குரு அருளையும், கணபதி அருளையும் பெற ‘சங்கடஹர கணபதி’ யை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுங்கள். 
10. மகரம் :
சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் மகர ராசியில் பிறந்த இவர்கள், ‘யோக கணபதி’ யை வணங்கி வந்தால் எல்லாம் நன்மையாகும். 
11. கும்பம் :
சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தும், அனைவரையும் அடக்கி ஆள விரும்பும் கும்ப ராசியினர், சித்தி விநாயகரை வணங்கினால் அனைத்து காரியங்களிலும் ஜெயமும், நல்ல புத்தியும் பெறுவார்கள்.
12. மீனம் :
குருவின் ஆதிக்கத்தில் இருக்கும் கள்ளம் கபடம் இல்லாத மீன ராசியினர், ‘பால கணபதி’ யை வணங்கி வாழ்வாங்கு வாழலாம்.