உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி; பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக-வினரை விளாசும் கமல்!-வீடியோ

 

உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி; பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக-வினரை விளாசும் கமல்!-வீடியோ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அதிமுக-வினரை சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அதிமுக-வினரை சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து, அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கோவை எஸ்.பி., பாண்டியராஜன் வெளியிட்டதும், அப்பெண்ணின் சகோதரரை அதிமுக நிர்வாகி பார் நாகராஜ் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறின. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், காவல்துறையின் செயல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால், எப்படி மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வருவார்கள் என மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதேபோல், பாலியல் வன்கொடுமை உள்ளாக்கபட்ட பெண்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டு விட்டதாக காவல்துறை கூறிய நிலையில், மேலும் இரண்டு வீடியோக்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், எங்களது தலையீடு இல்லை என்று கூறுவதில் ஆளுங்கட்சியினர் காட்டும் அக்கறை, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் இல்லை என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஆளுங்கட்சியினரை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெண்கள் பாதுகாப்பை உறதி செய்றேன்னு சொன்ன ஜெயலலிதா புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் நீங்கள் இந்த விவகாரத்தில் பெண்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். கட்சியின் தலைவராக இதனை கேட்கவில்லை, இரு பெண்களின் தந்தை என்ற பெயரில் கேட்கிறேன். என்ன செய்து இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேட போறீங்க. உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி” என அதிமுக-வினரை சரமாரியாக சாடியுள்ளார்.

முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பேரணியாக சென்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தனர். அதேபோல், இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி ராஜேந்திரனை நேரில் சந்தித்து கமல்ஹாசன் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.