உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் இதைப் படியுங்க… தூக்கி தூர எறிங்க…

 

உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் இதைப் படியுங்க… தூக்கி தூர எறிங்க…

முன்னொரு காலத்தில் தொலைதூரத்து கிராமம் ஒன்றில் ஏழை ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்

முன்னொரு காலத்தில் தொலைதூரத்து கிராமம் ஒன்றில் ஏழை ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காக தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி தினந்தோறும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கு அவன் இரண்டு மண் பானைகளைப் பயன்படுத்தி வந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் (கம்பின்) இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து தினந்தோறும் ஆற்றிலிருந்து தனது தேவைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. 
குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதனிடம் இருக்கும் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே நாட்கள் ஓடின. ஒரு நாள், தன் சக நண்பனின் கேலியைப்  பொறுக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து, “ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. நீங்களோ அத்தனை தூரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறீர்கள். ஆனாலும் என்னால் முழுமையாக அந்த தண்ணீரைக் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்” என்றது.
’இன்று ஒரு நாள் நான் தண்ணீர் எடுத்து வரும் பொழுது, வீட்டிற்கு வரும் பாதையை நீ கவனித்துக் கொண்டு வா’ என்றான் எஜமான்.

 அழகழகானப் பூச்செடிகள்

சரியென சம்மதித்த பானை, மாலை நேரம் வருவதற்காக காத்திருந்தது. அவன் சொன்னபடியே, தண்ணீர் எடுத்து வரும் பொழுது வரும் பாதையை கவனித்த பானைக்கு ஆச்சர்யம் தாளவில்லை. பாதையின் இரு பக்கங்களில், ஓட்டைப் பானை இருக்கிற பக்கம் முழுவதும் கண்களைக் கவரும் விதத்தில் அழகழகானப் பூச்செடிகள் வரிசையையாகப் பூத்துக் குலுங்கின.

இப்பொழுது எஜமானன் பேச ஆரம்பித்தான். ’உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை தினமும் நீ சிறிது சிறிதாக சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களைத் தருகின்றன. அவற்றை நான் பூஜைக்கு பயன்படுத்துகிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன். அடுத்த மாதம் நாம் கடந்து வரும் பாதையின் அடுத்த பக்கத்தில் உன்னை மாற்றி விட்டு, அந்த பாதையிலும் பூச்செடிகளை விதைக்க எண்ணியிருக்கிறேன்’ என்றான்.

இதைக் கேட்ட பானை தன்னைக் கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது. தாழ்வு மனப்பான்மை நம்மை மேலும் முன்னேறி, கடமையைச் செய்ய விடாமல் உட்கார வைத்து விடும். அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.