ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி நியமனம்

 

ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி நியமனம்

ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவியை நியமிக்கப்பட்டுள்ளார்.

பாக்தாத்: ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவியை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈராக் நாட்டில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தெருக்களில் திரண்டு நடத்திய போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. மேலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 400 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

iraq

இருப்பினும் நாளுக்குநாள் மக்களின் போராட்டம் தீவிரமடைய தொடங்கியது. இது பிரதமர் அப்துல் மஹ்திக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த, கடந்த நவம்பர் மாதம் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தால் முன்மொழியப்பட்ட பிரதமர் வேட்பாளர்களை போராட்டக்காரர்கள் நிராகரித்தனர். மக்களுக்கு ஆதரவான நபரை பிரதமர் பதவியில் அமர்த்த வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறை மந்திரி முகமது தவுபிக் அலாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஈராக் நாட்டு அதிபர் பர்ஹாம் சாலி அலாவியை பிரதமராக நியமித்துள்ளார். முகமது தவுபிக் அலாவி தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற உடனே, அரசுக்கு எதிராக நடந்து வரும் மக்களின் போராட்டத்துக்கு அலாவி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிப்பேன் எனவும், ஊழலை எதிர்த்து போராடுவேன் எனவும் அலாவி உறுதியளித்துள்ளார்.