இளையராஜா 75 விழா குழுவில் இருந்து பார்த்திபன் திடீர் விலகல்!

 

இளையராஜா 75 விழா குழுவில் இருந்து பார்த்திபன் திடீர் விலகல்!

இளையராஜாவிற்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவின், அமைப்பாளர்கள் குழுவில் இருந்து நடிகர் பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: இளையராஜாவிற்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவின், அமைப்பாளர்கள் குழுவில் இருந்து நடிகர் பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக ‘இளையராஜா 75’ என்ற பெயரில் விழா எடுக்க இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த விழாவில் முதல்நாள் இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடுவார்கள். இரண்டாம் நாள் இளையராஜா குழுவினர் இசைநிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பங்கை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இளையராஜா கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த விழாவை நடத்த  ஒரு குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழுவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். இதில் நடிகர் பார்த்திபனும் இடம்பெற்றார். 

ilaiyaraja

வித்தியாசமான ஐடியாக்களால் மேடையில் பல மாயாஜாலங்கள் நிகழ்த்த பார்த்திபன் யோசனை பயன்படும் என்று எல்லோரும் ஏகமனதாக பார்த்திபனுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், பார்த்திபன் விழா குழுவில் இருந்த ஒருவரிடம் “எனக்கு இருபது ஹார்மோனியம் வேண்டும் அதை வைத்து ஒரு கான்செப்ட் பண்ணலாம்“ என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டுவிட்டு நடிகர் ஒருவர் “அவ்வளவு செலவு செய்ய முடியாது இது நிதிதிரட்டும் நோக்கத்தோடு நடக்கும் நிகழ்ச்சி அதனால் செலவை குறைத்துதான் செய்ய முடியும்“ என்று கூறியிருக்கிறார். 

இதனால் கோபமான பார்த்திபன், “இந்தக் குழுவிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு போய்விட்டதாக சொல்கிறார்கள். மேலும் நிகழ்ச்சிக்கு போடப்பட்ட டிக்கெட்டின் விலை இருபத்தைந்தாயிரம் ரூபாய்தான் முதல் தொகையாம் இவ்வளவு தொகை கொடுத்து யாரும் டிக்கெட்வாங்க மாட்டார்கள் என்று கூறியும் யாரும் கேட்க வில்லையாம். இதனால் டிக்கெட் விற்பனை மந்தமாகத்தான் நடக்கிறதாம்.

இதனால் நிகழ்ச்சி நாளன்று கூட்டம் கூடுமா என்பது சந்தேகமாக இருக்கிறதாம். இது தெரிந்து  இளையராஜாவும் வேறு ஒரு தேதிக்கு வேண்டுமானால் நிகழ்ச்சியை மாற்றி வைக்கலாம் என்று கேட்பதாக தெரிகிறது.