இளையராஜாவுக்காக களமிறங்கிய பாரதிராஜா…! நெகிழ வைத்த நட்பு!

 

இளையராஜாவுக்காக களமிறங்கிய பாரதிராஜா…! நெகிழ வைத்த நட்பு!

20 வருடங்களாக இளையராஜாவுக்கு இசைக்கோயில் போல் இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் அவர் நுழைந்து பல நாட்கள் ஆகின்றன

இளையராஜாவும், பாரதிராஜாவும் சேர்ந்து தமிழ் சினிமாவில் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. சிறு வயது முதலே நட்பாய் இருந்த இவர்களுக்குள் சில சாத்தான்கள் வேதம் ஓத, இருவரும் பல வருடங்களாக பேசிக் கொள்ளாமலே இருந்து வந்தார்கள்.  இவர்களை ஒன்று சேர்த்த புண்ணியத்தை செய்திருக்கிறார் பிரசாத் ஸ்டூடியோ எல்.வி.பிரசாத்தின் பேரன்.
நம் மனதை விட்டு என்றுமே நீங்காத ஆயிரக்கணக்கான பாடல்களை இசைஞானி இளையராஜா இசையமைத்தது சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் டீலக்ஸ் ரெக்கார்டிங் தியேட்டரில் தான். பல ஹிட் பாடல்கள் உருவான இடம் அது. ஆரம்ப காலங்களில் இருந்து இளையராஜா, அவருக்கென்று ஒரு தனி ஸ்டுடியோவை உருவாக்கிக் கொள்ளவில்லை. அந்தளவிற்கு பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டர் அவருடைய உணர்ச்சிகளோடு கலந்த ஒரு இடமாகவே மாறியிருந்தது. சமீபத்தில், அப்படி பொக்கிஷமாக உபயோகப்படுத்தி வந்த இடத்தைப் பயன்படுத்துவதில் புதிய சர்ச்சை ஏற்பட்டது. எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய் பிரசாத். இளையராஜாவை அவருடைய இசைப் பணியை செய்ய விடாமல் ஸ்டுடியோவின் நுழைவு வாயிலில் மரச்சாமான்களையும், கணினிகளையும் அடுக்கி வைத்திருப்பதாகவும், இளையராஜாவின் இசைக் கருவிகளை சேதமடைய செய்வதாகவும் சாய் பிரசாத் மீது இளையராஜாவின் மேனேஜரான கஃபார் விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளார். 

ilaiyaraja

இதன் பின்னர், 20 வருடங்களாக இளையராஜாவுக்கு இசைக்கோயில் போல் இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் அவர் நுழைந்து பல நாட்கள் ஆகின்றன. சர்ச்சையில் இருக்கும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவிற்குள் நுழைவாரா என்பதே சந்தேகமாக உள்ளது என்கிறார்கள். இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இது நடைபெறுகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இத்தனைக்கும் சரியான தேதியில் இத்தனை வருடங்களாக அவர்கள் கேட்கும் வாடகையை சரியாக செலுத்தி வந்திருக்கிறார் இளையராஜா. இந்த விவகாரம் தான் பிரிந்த நண்பர்களை ஒன்று சேர்த்திருக்கிறது.

barathiraja

இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்காமல் இருக்கும் விஷயம் பாரதிராஜாவின் காதுகளுக்கு எட்ட, கிராமத்து சிங்கமாய் சிலிர்த்தெழுந்து இருக்கிறார் பாரதிராஜா. பல வருஷங்களா ஒரு ராஜா மாதிரி வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவன் இளையராஜா… அவனை ஸ்டூடியோவை விட்டு போகச் சொல்ல யாராலும் முடியாது.. என்று ஆவேசமாக கொந்தளித்ததோடு, பழைய மனஸ்தாபங்களை எல்லாம் மறந்து விட்டு, இது பற்றி கேள்விப்பட்டதும் இளையராஜாவுக்கு உடனே போன் செய்து பேசியிருக்கிறார்.நான் இருக்கிறேன்… எவன் வருவான்னு பார்த்துக்கறேன்’ என்று ஆவேசத்தோடு பாரதிராஜா அதன் பிறகு அதிரடியாய் களமிறங்கியதை ஆச்சர்யமாய் பார்க்கிறார்கள் கோலிவுட்டில். என்ன தான் பிரச்சனையா இருந்தாலும், இத்தனை வருஷ நட்பு விட்டு கொடுக்குமா? என்று உச் கொட்டுகிறார்கள்.  பாரதிராஜா களமிறங்கி காய் நகர்த்தி வருவதால், கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறார் பிரசாத் ஸ்டூடியோ அதிபரின் பேரன்.