இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்; கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்

 

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்; கும்மிடிப்பூண்டியில் பயங்கரம்

கும்மிடிப்பூண்டியில் இளம்பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இளம்பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் அதிகமாக நடைபெறும் இதுபோன்ற செயல்கள் தற்போது தமிழகத்திலும் நடைபெற துவங்கி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், கும்மிடிப்பூண்டி பால கிருஷ்ணபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் என்பவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஷைலஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை விவாகரத்து செய்தவர் ஆவார்.

கார்த்திகேயன் மற்றும் ஷைலஜா ஆகிய இருவரும் கும்மிடிப்பூண்டியை அடுத்த குமரநாயக்கன்பேட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். கோபால்கண்டிகை என்ற இடத்திடம் வந்த போது அவர்களை 4 பேர் அடங்கிய கும்பல் திடீரென மறித்தது. அவர்கள் கார்த்திகேயனை தாக்கி அங்கிருந்து விரட்டினர். அதன் பின்னர் அவரது காதல் மனைவியை கத்திமுனையில் மிரட்டி அவர்கள் 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதற்கிடையே விரட்டியடிக்கப்பட்ட கார்த்திகேயன் கிராம மக்களிடம் நடந்ததை கூறி உதவி கோரினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் திரண்டு வந்தனர். அதனை கண்டதும் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஷைலஜாவை பாலியல் வன்கொடுமை செய்தது அதே பகுதியை சேர்ந்த மோகன், முனியசாமி மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.