இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோயில் : இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் ஸ்தலம்!

 

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோயில் : இரட்டை நாயினை வாகனமாக கொண்ட ஒரே பைரவர் ஸ்தலம்!

இலுப்பைக்குடி அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலின் மேன்மைகளை பற்றியும் அந்த கோயிலின் வழிபாட்டு சிறப்புகள் பற்றியும் பார்போம்.

சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அருகில் உள்ள இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயில் நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும் .

siva

இத்திருக்கோயிலில் 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் சித்தர் அவர்கள் மூலிகைகளை தங்கமாக மாற்றியது,இரட்டை நாயினை வாகனமாக பெற்றுள்ள பைரவர், தெட்சிணாமூர்த்தியின் தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது,

இக்கோயிலில் உள்ள குட்டி விநாயகர் சிற்பத்தில் கண் இமையும்,விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு,வாராஹி தேவிக்கு பஞ்சமி தினங்களில் சிறப்பு வழிபாடு,வேறெந்த கோயில்களிலும் இல்லாத நாய்க்கடி பலகை, போன்ற பல்வேறு வியக்கவைக்கும் அற்புதங்களை பெற்ற திருத்தலம் இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் திருத்தலம் ஆகும்.

siva

இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. சித்தர்களில் ஒருவரான கொங்கணர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் கோயிலில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். 

மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வேண்டி இத்திருத்தலத்தில் வழிபாடு செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்து இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். 

ambal

அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. 

பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது.

guru

ஸ்வர்ணம் தங்கம் தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

இரட்டை நாய் வாகன பைரவராக இத்தலத்து பைரவர் இருப்பது சிறப்பம்சம் ஆகும். வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடது புறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடைபெறுகிறது.

ஸ்தல விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர், நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் இக்கோயிலில் அமைந்துள்ளது.

temple

சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் அமைந்துள்ளது. இந்த வாராஹி தேவிக்கு பஞ்சமி தினங்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது.

vinaygar

இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது பண்டைய தமிழர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமணம் விரைவில் நடைபெற, புத்திர தோஷங்கள் நீங்க இக்கோயிலில் உள்ள பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். 

சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்தும்,விசேஷ பூஜைகள் செய்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுகின்றனர். 

varaagi

பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட நாய்க்கடி பலகை இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். 

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெறுகிறது .

அதுமட்டும் இன்றி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிரதோஷமும் , தேய்பிறை அஷ்டமி வழிபாடும், பஞ்சமி தினங்களில் வராகி வழிபாடும் இக்கோயிலில் பிரதான வழிபாடாக கருதப்படுகிறது.