இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா; பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே நாளை பதவியேற்பு

 

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா; பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கே நாளை பதவியேற்பு

இலங்கை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

கொழும்பு: இலங்கை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். ஆனால், ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார். இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

அதன்பின்னர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா வெளியிட்ட அறிவிப்பை, அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்தார். இதனால், நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேன, அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து, அதிபர் சிறிசேனாவின் அந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவின் நடவடிக்கை செல்லாது என்றும், நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டது. அத்துடன், ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவி விலகியதை தொடர்ந்து, இலங்கை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியேற்கிறார்.