இலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு; நாடாளுமன்றம் நள்ளிரவில் கலைப்பு?

 

இலங்கை அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு; நாடாளுமன்றம் நள்ளிரவில் கலைப்பு?

இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க அந்நாட்டு அதிபர் சிறிசேன திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க அந்நாட்டு அதிபர் சிறிசேன திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ராஜபக்சே பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார். இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையடுத்து, ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது. மேலும், ராஜபக்சேவிற்கு பெரும்பான்மையான எம்.பி.-க்களின் ஆதரவு இல்லை எனவும், இதனால் எம்.பி.-க்களை இழுக்க அங்கு குதிரை பேரங்கள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் வாக்குகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே, அவர்களின் ஆதரவை நாட இரு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நவம்பர் மாதம் 16-ம் தேதி வரை அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேன முடக்கினார். ஆனால், உலக நாடுகளின் வலியுறுத்தல்களை அடுத்து, இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், நாடாளுமன்றம் கூடியதுமே நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னெடுப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க அந்நாட்டு அதிபர் சிறிசேன திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.