‘இறைவா! குழந்தையை மீட்டு எங்கள் இதயங்களின் படபடப்பை போக்கு’ : குழந்தை சுர்ஜித் குறித்து நடிகர் ராஜ்கிரண் உருக்கம்!

 

‘இறைவா! குழந்தையை மீட்டு எங்கள் இதயங்களின் படபடப்பை போக்கு’ : குழந்தை சுர்ஜித் குறித்து நடிகர் ராஜ்கிரண் உருக்கம்!

குழந்தையை மீட்கும் பணியில் கடந்த 20 மணிநேரமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

திருச்சி : மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து  நடிகர் ராஜ் கிரண்  வேதனை தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்  சுர்ஜித் என்ற  2 வயது குழந்தை நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில்  தவறி விழுந்துள்ளது.  குழந்தையை மீட்கும் பணியில் கடந்த 20 மணிநேரமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். குழந்தை சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளத்துக்குள் மண்  சரிவு ஏற்பட்டுள்ளதால்  குழந்தையின் நிலை குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் குழந்தையை உயிருடன் மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 

‘சில வருடங்களுக்கு முன்பு
“அறம்” என்று ஒரு திரைப்படம் வந்தது…
ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து விடும், குழந்தைகள் பற்றிய,
“விழிப்புணர்வு” ஏற்படுத்துவதற்கான,
சினிமா கூத்தாடிகளின் சமூக அக்கறை அது…
ஆனால், அரசியல் கூத்தாடிகள்
அதிலிருந்து எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை…

அரசாங்கமே எல்லாவற்றையும்
பார்த்துக்கொள்ளும் என்கிற,
சோம்பேறித்தனம் மக்களிடம் பெருகிவிட்டது…

“தோண்டிய ஆழ்துளைக்கிணற்றை
மூடாமல் விட்டால், அது ஆபத்தானதே,
அதை மூடி விட வேண்டுமே” என்ற
தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது…

நாம் எப்போது திருந்தப்போகிறோம்
என்பது தெரியவில்லை…

இப்போது, அமைச்சர்களும்,
அரசு அதிகாரிகளும், ஸ்தலத்தில்
நின்று, குழந்தையை மீட்க போராடுவது,
கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. இருந்தாலும், குழந்தையை கண்ணால்
கண்டால் தானே, பெற்ற தாய்க்கும்,
எனக்கும், தமிழக மக்களுக்கும்,
நெஞ்சு படபடப்பு அடங்கி நிம்மதி வரும்…

எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி
அடைந்து விட்ட நம் நாட்டில்,
இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக,
ஒரு நல்ல தொழில் நுட்பத்தை
கண்டு பிடிக்க முடியாதா…

 

 

நேற்று மாலை 5 மணிக்கு தெரிய வந்த
சம்பவத்துக்கு, இன்று காலை தான்,
“பேரிடர் மீட்புக்குழு” வருகிறதென்றால்,
இதை எப்படி எடுத்துக்கொள்வது…?

இறைவா,
நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருக்கிறோம்…
வழி தெரியாமல் தவிக்கிறோம்…
அழுது அழுது உன்னிடமே மன்றாடுகிறோம்…
எங்கள் குழந்தையை எப்படியாவது
மீட்டுக்கொடுத்து,
எங்கள் இதயங்களின் படபடப்பை போக்கு…’ என்று குறிப்பிட்டுள்ளார்.