‘இரவு செல்போனில் சாட்டிங்’.. அப்பா திட்டியதால் மகள் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை!
கல்லூரியில் படித்து வந்த ரக்ஷா தனக்கு செல்போன் வாங்கி கொடுக்குமாறு நீண்ட நாட்களாகக் கோவிந்தனிடம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தம்பதி கோவிந்தன்-ராணி. இவர்களுக்கு பிரஷாந்த் என்ற மகனும், ரக்ஷா என்ற மகளும் இருந்தனர். கொங்குநாடு மகளிர் கலைக் கல்லூரியில் படித்து வந்த ரக்ஷா தனக்கு செல்போன் வாங்கி கொடுக்குமாறு நீண்ட நாட்களாகக் கோவிந்தனிடம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். அதனால், இரண்டு மாதங்களுக்கு முன் ரக்ஷாவுக்கு ஒரு ஆண்டிராய்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார். போன் வாங்கியதிலிருந்து ரக்ஷா அதனையே பார்த்துக் கொண்டிருந்ததால், பெற்றோர்கள் திட்டியுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு 11 மணி வரைக்கும் நண்பர்களுடன் சாட் செய்து கோபமடைந்த கோவிந்தன், ரக்ஷாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று இரவு வீட்டிலிருந்த ஒரு அறைக்குச் சென்று கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுள்ளார். காலை வெகு நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது ரக்ஷா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், ரக்ஷாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பா திட்டியதால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.