இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய தாயை கொன்ற மகள் கைது

 

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய தாயை கொன்ற மகள் கைது

டெல்லியில் முதல் கணவரை பிரிந்தது குறித்து குற்றச்சாட்டியும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய தாயை கோபத்தில் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று டெல்லி மயாபுரியின் கஹசன் பஸ்தியில் ஒரு பெண் கலக்கமான மனநிலையில் மற்றும் தலையில் காயத்துடன் நிற்பதை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் தாயை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்துள்ளாள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

கொலை

47 வயதான நீரு பக்கா மின் விநியோக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்தால் ஹரி நகரில் அவரது தாயார் சந்தோஷ் பக்காவுடன் (வயது 81) வசித்து வந்தார்.  முதல் கணவரை பிரிந்தது குறித்து குற்றச்சாட்டியும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படியும் சந்தோஷ் பக்கா அடிக்கடி தனது நீருவை வலியுறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடக்கும்.

கைது

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அதே போன்று வாக்குவாதம் இருவருக்கும் இடையே எழுந்தது. ஒரு கட்டத்தில் கோபத்தில் நீரு பக்கா அருகில் கிடந்த கம்பியை எடுத்து தனது வயதான தாயை தாக்கி உள்ளார். பின் வீட்டை விட்டு வெளியே வந்து கசன் பஸ்தி பகுதியில் நின்றார். அப்போதுதான் அவரை நாங்கள் பார்த்தோம். அவரிடம் விசாரணை செய்த போது தாயை இரும்பு கம்பியால் அடித்து விட்டு வந்து விட்டதாக கூறினார்.  உடனே அவரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்தபோது சந்தோஷ் பக்கா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து நீரு பக்கா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.