இரட்டை குடியுரிமை விவகாரம்.. சபாநாயகர் கருத்தை எதிர்த்து திமுக வெளிநடப்பு !
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இரட்டை குடியுரிமை வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்ததாகச் சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து இரண்டாம் நாளாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் பாண்டிய ராஜன், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றும் அதிமுகவின் நிலைப்பாடு சரியானது தான் என்றும் கூறினார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதும் பல ஆண்டுகளாக அந்த கோரிக்கையை வலியுறுத்தினார் என்றும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் அமைச்சர் பாண்டிய ராஜன் பேச்சில் உரிமை மீறல் இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதனை மறுத்த சபாநாயகர் தனபால், அமைச்சர் பேச்சில் எந்த உரிமை மீறலும் இல்லை என்று தெரிவித்தார். சபாநாயகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதே போல, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.