இரட்டை இலையின் கெத்தும்; வீணான டிடிவி தினகரனின் போராட்டமும்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் நீண்டகாலமாக தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒரு சின்னம். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக இரட்டை இலையை சின்னமாக பெற்றதற்கு தனி வரலாறு உண்டு.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் நீண்டகாலமாக தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒரு சின்னம். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக இரட்டை இலையை சின்னமாக பெற்றதற்கு தனி வரலாறு உண்டு.
1973-ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுகவை விட்டு பிரிந்து வந்த எம்ஜிஆர் புதிதாக அதிமுக என்ற கட்சியை துவங்கியிருந்த சமயம் அது, அதிமுக அந்த தொகுதியில் போட்டியிடும் என எம்ஜிஆர் அறிவித்தார். வேட்பாளரின் செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு மாயத்தேவர் என்பவரை வேட்பாளராக நிறுத்தினார். அந்தத் தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி கண்டார், இரட்டை இலை அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமானது. இரட்டை இலை சின்னம் ஒருமுறை மாறிப்போனதால், எம்ஜிஆர் நிறுத்திய வேட்பாளர் தோல்வியை சந்தித்த வரலாறும் இங்கு உண்டு.
எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரு அரசியல் ஆளுமைகளும் இரு விரல்களை காட்டி மக்களிடம் பிரச்சாரம் செய்ததது மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. இரட்டை இலை என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடும் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஏராளம். இதனால்தான் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி அணியும், ஓபிஎஸ் – இபிஎஸ் அணியும் தீவிரமாக போட்டி போட்டது.
இவர்களில் போட்டியை பார்த்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவிக்கு குக்கர் சின்னமும், அதிமுகவுக்கு மின் கம்பமும் வழங்கப்பட்டது.
இதன் மீதான வழக்கு 5 மாதங்களுக்கு மேலாக தேர்தல் ஆணையத்தில் நடந்தது. கடைசியாக தேர்தல் ஆணையம் 2017 நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ் – இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், ‘ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியானது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த மனுவின் சாராம்சமானது, அதிமுகவின் அதிகப்படியான எம்எல்ஏ-க்கள் எந்த அணியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே இந்த சின்னம் செல்லும் என்பதை மைய கருத்தாக கொண்டு தான் இந்த வழக்கு பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது, ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை வழங்கியது செல்லும் என்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட மற்ற நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இன்றைய அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் தேர்தலில் எந்த அளவு உதவும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.