இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: டிடிவி தினகரன் நேரில் ஆஜர்

 

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: டிடிவி தினகரன் நேரில் ஆஜர்

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி குற்றப்பதிவு நகலை டி.டி.வி. தினகரன் பெற்றுக்கொண்டார்.

டெல்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி குற்றப்பதிவு நகலை டி.டி.வி. தினகரன் பெற்றுக்கொண்டார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

முடக்கப்பட்ட சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் டி.டி.வி. தினகரன் மனு கொடுத்தார். இந்த மனு விசாரணையின் போது, தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி. தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் நிலை குறித்து டிசம்பர் 5-ஆம் தேதிக்கு முன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலை சம்பந்தப்பட்டவர்கள் நாளை (5-ஆம் தேதி) பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகின்ற 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.