இன்றைய இலவசம்… நாளைய லாபம்… ஜெயிச்சு காட்டிய முகேஷ் அம்பானி

 

இன்றைய இலவசம்… நாளைய லாபம்… ஜெயிச்சு காட்டிய முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.990 கோடி அள்ளியுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் ஜியோ ரூ.680 கோடி மட்டுமே லாபம் பார்த்து இருந்தது.

மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறை சேவையில் காலடி வைத்த பிறகு நம் நாட்டு தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இலவச அழைப்பு, இன்டர்நெட் என பல அதிரடி சலுகைகளால் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ தன் பக்கம் ஈர்த்தது. ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை மூடின. அதேசமயம் ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்களும் கட்டண குறைப்பு போன்ற நடவடிக்கையில் இறங்கின.

முகேஷ் அம்பானி

ஜியோ நிறுவனம் தொடக்கத்தில் ஒரு பைசா கூட முகேஷ் அம்பானிக்கு லாபமாக சம்பாதித்து கொடுக்கவில்லை. அது பற்றி எல்லாம் முகேஷ் அம்பானி கவலைபட்டதாக தெரியவில்லை. வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில்தான் ஜியோ அதிக கவனம் செலுத்த தொடங்கியது. ஒரு கட்டத்தில் போதும் இனி வந்த வேலையை பார்ப்போம் என்ற முடிவு செய்த ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவைக்கு கட்டணம் விதிக்க தொடங்கியது. அது முதல் ஜியோ நிறுவனம் மெல்ல மெல்ல லாப பாதைக்கு திரும்பியது. 

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.990 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 45 சதவீதத்துக்கும் அதிகமாகும். 2018 செப்டம்பர் காலாண்டில் ஜியோவின் நிகர லாபம் ரூ.681 கோடியாக இருந்தது. 2019 செப்டம்பர் காலாண்டில் ஜியோவின் செயல்பாட்டு வருவாய் சுமார் 34 சதவீதம் அதிகரித்து ரூ.12,354 கோடியாக உயர்ந்துள்ளது.