இன்று முதல் ஆரம்பமாகிறது முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்!
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மனுக்களைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தியது
சேலம்: முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
நகர மற்றும் கிராமப்புற மக்களின் குறைகளைச் சரிசெய்யும் வகையில் முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரங்கள் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாளில் மக்களின் குறைகளை மனுக்களாகப் பெற வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மனுக்களைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும் மனுக்கள் பெற்ற ஒருவாரத்திற்குள் அதற்கு தீர்வு எட்டப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து செப்டம்பரில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கும், காலை 11.00 மணிக்கு எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் பிற்பகல் 2 மணியளவில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக்களைப் பெறுகிறார். தலைவாசல், ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் நாளை அவர் மக்களைச் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.