இனி மேல் கம்பெனிய நடத்துறது ரொம்ப கஷ்டம்…உடனடியாக கொஞ்சம் பணம் கொடுங்க மோடிஜி! கெஞ்சும் பி.எஸ்.என்.எல்.

 

இனி மேல் கம்பெனிய நடத்துறது ரொம்ப கஷ்டம்…உடனடியாக கொஞ்சம் பணம் கொடுங்க மோடிஜி! கெஞ்சும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செயல்பாட்டு இழப்பு ரூ.90 ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கோடக் இன்ஸ்டியுஷனல் ஈகுவிடிஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதேநேரம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலைக்கு நிறுவனம் வந்து விட்டதால், உடனடியாக நிதி கொடுங்க என்று மத்திய அரசுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

bsnl

ஒரு காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம்தான் தனது தொலைத்தொடர்பு சேவை மூலம் இந்திய மக்களை இணைத்து வைத்து இருந்தது. ஆனால் என்று செல்போன் வந்ததோ அது முதல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தேய்பிறை காலம் தொடங்கி விட்டது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தடம் பதித்த பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

2018 டிசம்பர் நிலவரப்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செயல்பாட்டு இழப்பு ரூ.90 ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கோடக் இன்ஸ்டியுஷனல் ஈகுவிடிஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதேநேரம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிறுவனத்தை மூடும் பரிந்துரையையும் மத்திய அரசு நிராகரித்து விட்டது. ஆனால், கிட்டத்தட்ட நிறுவனத்தை நடத்த முடியாத நிலைக்கு பி.எஸ்.என்.எல். வந்து விட்டது. 

bsnl

இந்தநிலையில் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் இணை செயலருக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிகாரி புரன் சந்திரா கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார். அதில், நிறுவனத்தின் மாத வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது. இதனால் நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்தாத முடியாத நிலை வந்து விட்டது. உடனடியாக நிதி உதவி அளிக்கவில்லை என்றால் நிறுவனத்தை நடத்த முடியாது என்று தெரிவித்து இருந்தார். 

நிறுவனம் நஷ்டத்தில் ஓடும் நிலையில், பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஜூன் மாத சம்பளம் ரூ.850 கோடி மற்றும் பாக்கி வைத்துள்ள ரூ.13 ஆயிரம் கோடி ஆகியவற்றை பி.எஸ்.என்.எல். நிறுவனம் எப்படி சமாளிக்க போகிறது என்பது தெரியவில்லை.