‘இனி தினமும் மூன்று முறை தரிசனம்’…கெத்து காட்டும் நித்தியானந்தா
இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டு வருகிறார்
எந்த செய்தியை பார்த்தாலும் நித்தியானந்தா தான்… ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது. இதுவொருபுறமிருக்கத் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டு வருகிறார்.
தென்அமெரிக்க நாட்டில் உள்ள தீவை விலைக்கு வாங்கியதாகவும், அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும் இந்து மதத்தைப் பின்பற்றும் யார் வேண்டுமானாலும் கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு பாஸ்போர்ட், மொழி, இணையதளம் உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பானது கேலி கிண்டலுக்கு ஆளானாலும், பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் தோன்றிய நித்தியானந்தா, கைலாசா நாடு குறித்து விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில், எந்த நாட்டுக்கும் எதிரானவன் நான் இல்லை, கைலாசா என்பது ஒரு இடமில்லை, அது கடவுள் நிறைந்திருக்கும் அண்ட சராசரம் . கைலாசாவின் திட்டமே எங்கு எப்படி இருந்தாலும் இறைவனை தரிசனம் செய்யலாம் என்பதேயாகும்.
தினந்தோறும் ஆன்லைனில் சத்சங்கம் நடத்தும் நித்தியானந்தா, இனி தினமும் மூன்று முறை தரிசனம் தர இருப்பதாகவும், யோகா, க்ரியா, ஞான தத்துவங்களைப் பற்றி அதிகம் பேச உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக நித்தியானந்தா இமயமலையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரின் சட்ட ஆலோசகர்கள் ஆலோசனைப்படி, கைலாசா தனிநாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.