இனியும் உங்கள் நடிப்பை நம்ப தயாராக இல்லை: பேரம் பேசிய விஜயகாந்தை கிழித்து தொங்கவிட்ட நிர்வாகி!

 

இனியும் உங்கள் நடிப்பை நம்ப தயாராக இல்லை: பேரம் பேசிய விஜயகாந்தை கிழித்து தொங்கவிட்ட நிர்வாகி!

அ.தி.மு.க – தி.மு.கவுடன் ஒரே நேரத்தில் கூட்டணி தொடர்பாகப் பேசிய, தே.மு.தி.க.வை அதன் நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: அ.தி.மு.க – தி.மு.கவுடன் ஒரே நேரத்தில் கூட்டணி தொடர்பாகப் பேசிய, தே.மு.தி.க.வை அதன் நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் தி.மு.க தரப்பு கூட்டணி பணியை  முடித்து தொகுதிகளை உறுதி செய்துவிட்டனர். தே.மு.தி.க தரப்பு அ.தி.மு.க உடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேமுதிக உடனான கூட்டணியை உறுதி செய்ய வந்தார் பா.ஜ.க அமைச்சர் பியூஷ் கோயல். தேமுதிக தரப்பு பா.ம.க.வை விட அதிக சீட்டு கேட்டுள்ளனர், அதிமுக தரப்பு 4 சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என கூறியிருக்கிறது.இதனால் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. அதே சமயம் தே.மு.தி.க.வினர் சிலரை தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியிருக்கிறார் தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ். ஆனால் திமுகவின் வாசல் கதவுகளோ அடைக்கப்பட தே.மு.தி.க நிலைமை மோசமாகியுள்ளது.

vijayakanth 1 ttn

இந்நிலையில் இது தொடர்பாகச் சென்னை மணலி தே.மு.தி.க. நிர்வாகி விஜய் பவுல்ராஜா விஜயகாந்த்துக்குப் பரபரப்பான கடிதத்தையும் கூடவே ராஜினாமா கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார். அதில், ‘உங்களின் திரைப்பட நடிப்பை உண்மை என நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் கொள்கையை நல்லது என நம்பி கடந்த 1999-ல் ரசிகர் மன்றத்தில் துவக்கி நேற்று வரை உங்களுடன் பயணித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனை அடைகிறேன்.  

sudhish ttn

அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்தேன் என அடிக்கடி கூறுவீர்கள். நேற்று உங்களின் உழைப்பை பார்த்த போது நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஒரே நேரத்தில் அதிமுக., திமுக கட்சிகளுடன் பேசி லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சித்தீர்கள். தொண்டர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்தீர்கள்.  உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என இறைவனின் பிரார்த்தனை செய்ததற்கு நீங்கள் நல்ல கைமாறு செய்தீர்கள்.

duraimurugan ttn

பொது வாழ்வில் தொண்டனின் நலம், தமிழகத்தின் நலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்களின் பொது வாழ்வு பதவி ஆசை என்ற நிலையில் உள்ளது.  இனியாவது உங்களை நம்பியவர்களை அடகு வைத்துத் தேர்தல் கூட்டணி பேசாதீர்கள். அதுதான் நீங்கள் தமிழகத்திற்குச் செய்யும் நன்மை. உங்களிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதால் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக மா.பா. பாண்டியராஜன் இருந்தால் உங்களின் நிலை என்ன? தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக ஈரோடு சந்திரகுமார் மற்றும் பி.எச். சேகர் இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருப்பீர்களா? உங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இனியும் உங்களின் நடிப்பை நம்பி ஏமாற தயாராய் இல்லாததால் தே.மு.தி.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன்’ என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க – தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு தொடர்பாக தே.மு.தி.க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.  மேலும் பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலக இருப்பதாகவும் தே.மு.தி.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.