இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

டிசம்பர் மாத வாகன விற்பனை, முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய புள்ளிவிவரங்களை பொறுத்து இந்தவாரம் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2019 டிசம்பர் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை வரும் புதன்கிழமை முதல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும். இந்த மாதத்தில் வாகன விற்பனை சிறிது ஏற்றம் கண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன விற்பனை நிலவரத்தை பொறுத்து அந்த துறையை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் விலையில் ஏற்றம் இறக்கம் ஏற்படலாம்.

வாகன விற்பனை

கடந்த நவம்பர் மாதத்தின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் நாளை மறுநாள் வெளிவர உள்ளது. ரிசர்வ் வங்கி, அரசு பத்திரங்களை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கையை  சிறப்பு ஒப்பன் மார்க்கெட் ஆப்ரேஷன் வாயிலாக நாளை மேற்கொள்கிறது. இதுதவிர சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பி.எம்.ஐ. இந்த வாரம் வெளிவருகிறது. இவற்றை பொறுத்தும் நம் நாட்டு சந்தைகள் வினையாற்றும்.

இந்திய ரிசர்வ் வங்கி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.