இந்த ஐப்பசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா…! ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம்! இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

 

இந்த ஐப்பசி மாதத்தில்  இத்தனை விசேஷங்களா…! ஐஸ்வர்யங்களைத் தரும் ஐப்பசி மாதம்! இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

பண்டிகை காலங்கள் நம்மை பரவசப்படுத்துபவை. விருந்தினர்களையும், நண்பர்களையும் புதுப்பித்துக் கொள்வதற்கும், அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கும் உகந்தவை. அதனாலத் தான் விசேஷங்களில் பத்திரிக்கை கொடுக்கும் போது, சுற்றமும், நட்பும்னு ஒரு வரியைச் சேர்கிறோம். இன்னைக்கு ஐப்பசி மாதம் துவங்குகிறது. பொதுவா ஐப்பசி மாதம் அடைமழைக் காலம்னு சொல்வாங்க. அதை உண்மையாக்குற விதத்துல தமிழகம் முழுக்கவே கன  மழை பெய்து வருகிறது. அடைமழை மட்டும் இல்லாம ஐப்பசி மாசத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு.

பண்டிகை காலங்கள் நம்மை பரவசப்படுத்துபவை. விருந்தினர்களையும், நண்பர்களையும் புதுப்பித்துக் கொள்வதற்கும், அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கும் உகந்தவை. அதனாலத் தான் விசேஷங்களில் பத்திரிக்கை கொடுக்கும் போது, சுற்றமும், நட்பும்னு ஒரு வரியைச் சேர்கிறோம். இன்னைக்கு ஐப்பசி மாதம் துவங்குகிறது. பொதுவா ஐப்பசி மாதம் அடைமழைக் காலம்னு சொல்வாங்க. அதை உண்மையாக்குற விதத்துல தமிழகம் முழுக்கவே கன  மழை பெய்து வருகிறது. அடைமழை மட்டும் இல்லாம ஐப்பசி மாசத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஐப்பசி தான். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.
எதனால ஐப்பசி மாதத்தை துலா மாதம்னு சொல்றோம். காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வு இம்மாதத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் ஐப்பசியில் தான் வருகிறது. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் அத்தனை விசேஷம். கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. ஒவ்வொரு விசேஷதைப் பற்றியும் நம் வாசகர்களுக்காக கொஞ்சம் விரிவாகவே சொல்கிறேன்.

muruga

கந்த சஷ்டி 
கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையின் உருவமான சூரபத்மனை எதிர்த்து நன்மையின் வடிவான முருகப்பெருமான் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வே சஷ்டி விரத முறையைக் கடைப்பிடிப்பது தான். நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை எல்லாம் விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தவிரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது. அனைத்து முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரத நாட்களில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமல் தினமும் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக் கொண்டு, சஷ்டி அன்று முழுவதும் திட உணவை உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர். இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.

sivan

சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் 
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது. வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.  ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது. அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.

shanam

துலா ஸ்நானம்
ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது. துலா ஸ்நானம் நிகழ்வு, ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது. காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது.  ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.
தனத்திரயோதசி
ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்கநகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். 
யம தீபம்
ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.
தன்வந்திரி ஜெயந்தி 
ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.
யமத் துவிதியை !
ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்று தான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப் பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.  இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர். 
கோவர்தன தினம்
ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும் மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். கோவர்த்தன கிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.
கோவத்ச துவாதசி 
ஐப்பசி மாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள்.
முருகன் சுக்ரவார விரதம்
முருகப் பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.  நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது.  நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும். முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.  இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும். 

gothavari

கேதார கௌரி விரதம்  
 இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள்  கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபடப்பட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும் இவ்விரதமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது,ஏழு, ஐந்து, மூன்று நாட்களும், ஒரு சிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கின்றனர். கோவில்களிலும், வீடுகளிலும் கேதார கௌரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்தல், நல்ல வாழ்கைத்துணை, நற்புத்திரர், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும்.  
பாபாங்குசா ஏகாதசி
ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும்.
இந்திரா ஏகாதசி
ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.
ஐப்பசி மாதத்தை சிறப்பு செய்தவர்கள்
இம்மாதத்தில் திருமூல நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது. பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜெயந்தியும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

diwali

தீபாவளி பண்டிகை!
இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி, ஒவ்வொரு வருஷமும் ஐப்பசியில் தான் வருகிறது. ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் இதனை வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளியன்று வழங்கப்படுகிறது.நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர். புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர். புதுமணத்தம்பதியர் தலை தீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது. சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ஐப்பசி மாதத்தில் விரதமுறையை மேற்கொண்டு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்.