இந்தோனேசியா நிலநடுக்கம்; சுனாமி: பலி எண்ணிக்கை 384-ஆக உயர்வு

 

இந்தோனேசியா நிலநடுக்கம்; சுனாமி: பலி எண்ணிக்கை 384-ஆக உயர்வு

இந்தோனேசிய நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 384-ஆக உயர்ந்துள்ளது

ஜகர்த்தா: இந்தோனேசிய நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 384-ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, அங்கு மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சுனாமி பாதித்த பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகளை இழந்த ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் சிக்கி இதுவரை 384 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 384-அக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், ஆங்காங்கே மனித உடல்கள் காணப்படுவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது.