இதயம் காக்க 10 வழிகள்!

 

இதயம் காக்க 10 வழிகள்!

இதயம் நம்முடைய உடல் முழுவதுக்கும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை செலுத்தவும், கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த ரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்பும் வேலை செய்கிறது. இந்த ரத்த ஓட்டம் தடைப்பட்டால் சில நிமிடங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துவிடும். தாயின் கருவில் முதல் சில வாரங்களில் தொடங்கி துடிப்பு ஓய்வின் உழைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த இதயத்தைக் காக்கும் வழிகளைக் காண்போம்…

இதயம் நம்முடைய உடல் முழுவதுக்கும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை செலுத்தவும், கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த ரத்தத்தை நுரையீரலுக்கு அனுப்பும் வேலை செய்கிறது. இந்த ரத்த ஓட்டம் தடைப்பட்டால் சில நிமிடங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துவிடும். தாயின் கருவில் முதல் சில வாரங்களில் தொடங்கி துடிப்பு ஓய்வின் உழைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த இதயத்தைக் காக்கும் வழிகளைக் காண்போம்…
1. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது, சிகரெட் பழக்கம், மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது ஆகியவையே மாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணிகள். இதுதவிர மரபியல் ரீதியாகவும் மாரடைப்பு வரலாம். எனவே, உங்கள் உடல்நிலையை அவ்வப்போது கண்காணியுங்கள். ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் அதை சரி செய்ய அல்லது கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யுங்கள். இப்படி செய்தால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

high-blood-pressure

2. பைக், கார் வைத்திருக்கிறோம்… இதை மூன்று மாதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை சர்வீஸ் செய்கிறோம். நம்முடைய உடலுக்கு என்றைக்காவது சர்வீஸ் செய்ய நினைத்திருக்கிறோமா? அந்த காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை விரதம், மூலிகை மருந்துகள் எடுத்துக்கொள்வது என்று உடலை சுத்தப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றைக்கு அப்படி எதுவும் இல்லை. குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்துகொள்ளுங்கள். கட்டணம் குறைவு என்று குறைந்த பேக்கேஜ் பரிசோதனை வேண்டாம், முழு உடலுக்கான அனைத்து பரிசோதனைகளும் நிறைந்த ஆய்வாக அது இருக்கட்டும்.

health-checkup

3. மேலே குறிப்பிட்டது போல இதய ரத்தக் குழாய் அடைப்பு எனப்படும் மாரடைப்பு வர முக்கிய காரணம் சர்க்கரை நோய். எனவே, அவ்வப்போது சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். எச்பிஏ1சி என்ற பரிசோதனை முக்கியம். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கட்டுக்குள் வைத்திருங்கள்.

sugar-level-check-up

4. அதேபோல் ரத்தத்தின் கொழுப்பு அளவைக் கண்டறியும் லிப்பிட் ஃப்ரொஃபைல் பரிசோதனை முக்கியம். கொழுப்பு அளவு அதிகமாக இருந்தால் டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரையுடன் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

choletral-level

5. நம்முடைய உணவு சரிவிகித உணவாக இருக்கட்டும். சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, சரியான அளவு சாப்பிடுவது முக்கியம். தினசரி உணவில் பச்சைக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். சர்க்கரை, உப்பு அளவை முடிந்தவரை குறைத்திடுங்கள். சாலட், முளைக்கட்டிய தானியங்கள், பால் போன்றவை எடுத்துக்கொள்ளுங்கள்.

healthy-food-89

6. அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் மீன் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் மாடு, ஆட்டிறைச்சி தவிர்ப்பது நல்லது. கோழிக் கறியையும் நெஞ்சு பகுதியாக சாப்பிடுவது நல்லது. கோழியின் தோல் நீக்கி வாங்குவது சிறந்தது. தோலில் மிக அதிகமான கொழுப்பு உள்ளது. மீனையும் எண்ணெய்யை ஊற்றிப் பொறித்து சாப்பிட வேண்டாம், குழம்பு மீன் அல்லது நீராவியில் வேகவைத்த மீன் என்றால் நல்லது.

steamed-fish

7. குழந்தைகளுக்கு முட்டை சரிவிகித உணவு. ஆனால் 30-35 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்பு உள்ளவர்களுக்கு முட்டை சரியான உணவு இல்லை. முட்டையில் உள்ள மஞ்சள் கரு அதிக ஊட்டச்சத்து, கொழுப்பு நிறைந்தது. இதய நோய்க்கு வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி செயல்படுவது நல்லது. அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைப் பகுதியை சாப்பிடலாம். அது புரதச் சத்து நிறைந்தது.

egg-white-89

8. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மாரடைப்பைத் தடுக்கும் தன்மை கொண்டது. ஃபிளெக்ஸ் விதை, வால்நட், சோயாபீன், நல்லெண்ணெய்யில் ஒமேகா 3 உள்ளது. இவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தாமல் இருப்பது நல்லது.

omega-3

9. ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடை உங்கள் உயரத்துக்கு ஏற்ற வகையில் உள்ளதா என்பதை கண்காணியுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, தினசரி உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான கலோரியை எரிப்பது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

exercise-89

10. சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. மற்றவர்கள் புகைத்து விட்ட புகையை சுவாசிப்பதும் கூட மாரடைப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே, சிகரெட் பிடிக்கும் இடத்திலேயே இருக்க வேண்டாம். சிகரெட் புகையில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு ஆக்சிஜனுக்கு மாற்றாக ரத்த சிவப்பணுவால் ஈர்க்கப்படுகிறது. இதனால் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால், இதயம் அதிகமாகத் துடித்து உடலுக்குக் கூடுதலாக ரத்தத்தை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனவே புகைக்கவும் வேண்டாம், புகைப்பவர்கள் அருகில் செல்லவும் வேண்டாம்!

no-smoking