இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் ஆபத்து தவிர்ப்பு

 

இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் ஆபத்து தவிர்ப்பு

பெங்களூரு: இரு இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

இண்டிகோ விமான நிறுவனத்தின் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற இண்டிகோ விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற இண்டிகோ விமானமும் நேருக்கு நேர் மோதக் கூடிய சூழல் உருவானது. இதில் ஹைதராபாத் நோக்கி சென்ற விமானத்தில் 162 பயணிகளும், மற்றொரு விமானத்தில் 166 பயணிகளும் என மொத்தம் 328 பேர் பயணம் செய்தனர்.

விமானங்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் அருகில் பயணிக்க கூடிய சூழல் ஏற்பட்டால், TCAS அமைப்பு எச்சரிக்கை விடுக்கும். இத்தகைய ஆட்டோமெட்டிக் எச்சரிக்கையின் மூலம் இண்டிகோ விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையின் உத்தரவை ஏற்று விமானிகள் விமானத்தின் திசையை மாற்றி இயக்கியுள்ளனர். அதன்படி ஒரு விமானம் 200 அடிக்கு கீழும், மற்றொரு விமானம் மேல் நோக்கியும் இயக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி சென்னை வான் பகுதியில் இண்டிகோ நிறுவனத்தின் விசாகப்பட்டணம் – பெங்களூரு வழி விமானமும், இந்திய விமானப்படைக்கு விமானமும் மோதவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.