ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து தமிழ் அகதிகள் அமெரிக்காவில் மீள் குடியேற்றம்

 

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து தமிழ் அகதிகள் அமெரிக்காவில் மீள் குடியேற்றம்

சிட்னி: ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து தமிழ் அகதிகள் உள்பட 13 அகதிகள் அமெரிக்காவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சித்த நூற்றுக்கணக்கான அகதிகள் மனுஸ் தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு மறுத்து வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே இந்த அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது 13 அகதிகள் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர். இதில் 2 ஈழத்தமிழ் அகதிகள், 2 பாகிஸ்தானியர்கள், 5ஆப்கானியர்கள், மியான்மரைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 13 பேர் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர்.

அதேசமயம் ஈரான், சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் அந்நாட்டு அகதிகள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் கடுமையான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் வேதனை தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கிறது. இது ஒரேமுறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

2013-ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது. 2013-ஆம் ஆண்டுக்கு முன்னர் படகு வழியே வந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் நவுரு மற்றும் மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் இன்றும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா எல்லைக்குள் நுழைந்த வியாட்நாம் படகிலிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் வியாட்நாமுக்கே நாடு கடத்தியதன் மூலம் ஆஸ்திரேலியா தன்னுடைய கடுமையான எல்லைக் கொள்கையை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.