ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3000 அகதிகள் தடுத்து நிறுத்தம்

 

ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3000 அகதிகள் தடுத்து நிறுத்தம்

ஆஸ்திரேலிய எல்லைகளின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3300 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிட்னி: ஆஸ்திரேலிய எல்லைகளின் இறையாண்மையை பாதுகாக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 3300 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கையின் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்ற 33 படகுகள் நடுக்கடலில் தடுக்கப்பட்டு 800 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதே போல், 78 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டதில் 2,525 அகதிகள் ஆஸ்திரேலியாவை நோக்கிய படகுகளில் ஏறுவதில் தடுக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆட்கடத்தல் அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் என  போரை எதிர்கொண்ட நாட்டின்  ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் கரை ஒதுங்கியது ஆஸ்திரேலியாவில் பெரும்  சிக்கலாக உருவெடுத்திருந்தது. 
 
ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்த 5 ஆண்டுக்காலத்தில் ஆட்கடத்தல் தொடர்பான 600-க்கும் மேற்பட்ட கைதுகள் நடந்துள்ளன. அதில் இலங்கையில் மட்டும் 500 கைதுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியா,  இந்தோனேஷியா, மலேசியா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ஆட்கடத்தல் தொடர்பான கைதுகள் நடத்தப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கையின் காரணமாக ஆபத்தான கடல் பயணங்களிலிருந்து பல உயிர்களை காப்பாற்றி இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு சொல்லிவரும் நிலையில், ஐ.நா.மற்றும் பல மனித  உரிமை அமைப்புகள் இக்கொள்கையை மனிதாபிமானமற்ற நடவடிக்கை என விமர்சித்து வருகின்றது.