ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சம் மாதவாடகை வீட்டில் சொகுசு வாழ்க்கை! சிக்கிய இந்திய தூதர்… திரும்ப அழைத்த மத்திய அரசு……

 

ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சம் மாதவாடகை வீட்டில் சொகுசு வாழ்க்கை! சிக்கிய இந்திய தூதர்… திரும்ப அழைத்த மத்திய அரசு……

ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சம் மாதவாடகை வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழந்ததுடன், பல நிதிமுறைகளிலும் ஈடுபட்ட அந்நாட்டுக்கான இந்திய தூதரை மத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது.

1988 பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரி ரேணு பால். ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதராக அந்நாட்டில் அவர் பணியாற்றி வந்தார். அடுத்த மாதம் அவரது பணிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், நிதி முறைகேடுகள் மற்றும் அரசு பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக அவரை மத்திய அமைச்சகம் திரும்ப அழைத்துள்ளது.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரம்

ஆஸ்திரியாவில் ரேணு பால் ரூ.15 லட்சம் மாதவாடகை வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து உள்ளார். மேலும், வாட் ரீபண்ட்டுகளை மோசடியாக பெற்றது மற்றும் அரசு வழங்கிய பல்வேறு அனுமதிகளில் உண்மைகளை மறைத்தார் போன்ற புகார்கள் மத்திய அரசுக்கு வந்தது. இதுதவிர வெளியுறவு விவகார துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அரசு இல்லத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளார். ரேணு பால் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததையடுத்து, மத்திய லஞ்சஒழிப்பு கமிஷன் உத்தரவிட்டு, வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் விசாரணை நடத்தியது. 

வெளியுறவுத்துறை அமைச்சகம்

கடந்த செப்டம்பரில் அமைச்சகத்தின் தலைமை லஞ்சஒழிப்பு அதிகாரி வியன்னா சென்று ரேணு பால் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தினார். பின் தனது அறிக்கையை மத்திய லஞ்சஒழிப்பு ஆணையத்திடம் கொடுத்தார். அந்த அறிக்கையில், ரேணு பால் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது, வெளியுறவுத்துறை அமைச்சத்தின் அனுமதி பெறாமல் அரசு இல்லத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தது உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 9ம் தேதி ரேணு பால் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து ரேணு பாலை இந்தியா திரும்படி வெளியுறவுத விவகாரங்கள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் ரேணு பால் ஒரு தூதரின் எந்தவொரு நிர்வாக அல்லது நிதி அதிகாரங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.