ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மகள்: மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதி; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மகள்: மர்மமான முறையில் இறந்து கிடந்த தம்பதி; அதிர்ச்சி தரும் சம்பவம்!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் சீனிவாஸ் நக்கீரேகான்டி. இவரும் இவரது மனைவி சாந்தியும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு  21 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சீனிவாஸ், டெக்சாஸ் மாகாணத்தின் மின்வாரிய துறையில் இயக்குநராக பணியாற்றி வந்தார். அதே போல் சாந்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார். மேலும் இந்த தம்பதியர் பல்வேறு வகையில் தொண்டு நிறுவன பணிகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்திய-அமெரிக்கா அறக்கட்டளை தலைவராக சீனிவாஸ் விளங்கினார்.

usa

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சீனிவாசின் வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதை கேட்டு பீதியடைந்த அக்கம் பக்கத்தினர் தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுகர்லேண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது வீட்டின் நுழைவாயில் அருகே, தலையில் குண்டுபாய்ந்த நிலையில் சாந்தி பிணமாக கிடந்தார். படுக்கை அறையில் சீனிவாஸ் இறந்துகிடந்தார். அவரது நெஞ்சில் குண்டு துளைத்திருந்தது. அவரது உடல் அருகே கைத்துப்பாக்கி கிடந்தது.

இந்த சம்பத்தின் போது சீனிவாசின் மகள் வீட்டில்தான் இருந்துள்ளார். ஆனால் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என அவர் போலீசாரிடம் கூறினார்.

குடும்ப பிரச்னை காரணமாக சீனிவாஸ் தனது மனைவி சாந்தியை சுட்டுக்கொலை செய்துவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.