ஆரம்பமே இப்படியா? 730 நாட்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை கேட்கும் அரசு அதிகாரி

 

ஆரம்பமே இப்படியா? 730 நாட்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை கேட்கும் அரசு அதிகாரி

இஸ்லாமாபாத்: ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் ஊதியத்துடன் 730 நாட்கள் விடுமுறை கேட்ட அதிர்சிகர சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றாலும், இம்ரான்கானின் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியது. இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைச் சேர்க்கும் போது அந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.

புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவுமே வேண்டாம் என மறுத்து எளிமையாக வாழ விருப்பம் தெரிவித்த சம்பவம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் ரயில்வேத்துறை அமைச்சரின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அந்நாட்டின் ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், ஊதியத்துடன் 730 நாட்கள் விடுமுறை கேட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

train-1

பாகிஸ்தான் ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது ஹனீஃப் குல் என்பவர், ரயில்வே அமைச்சக செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய ரயில்வே அமைச்சரின் அணுகுமுறை தொழில்முறை அல்லாத, மோசமான, மரியாதையற்ற வகையில் உள்ளது. ஒரு அரசு ஊழியராக அவருடன் பணியாற்ற முடியாது. எனவே, எனக்கு 730 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகளை அத்துறையின் அமைச்சர் சமீபத்தில் சந்தித்து பேசிய போது, அவர்களை கடுமையாக எச்சரித்ததால், உயர் அதிகாரி ஒருவர் ஊதியத்துடன் கூடிய நீண்ட கால விடுமுறைக்கு விண்ணப்பித்ததாக தெரிகிறது.

இம்ரான் கான் பதவியேற்று சில நாட்களிலேயே, அவரது அமைச்சரவை சகாக்களின் நடவடிக்கைகளால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், வரும் காலங்களில் அவரது ஆட்சி எப்படி இருக்கும் என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

 

Pakistan Railway official applied for 730 days of leave