ஆம்னி பேருந்துகளில் 20 சதவிகிதம் கட்டண உயர்வு: பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தகவல்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், ஆம்னி பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன. அதுபோல், இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் அதீத கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 20 சதவீதம் மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கட்டண உயர்வை தடுக்க இயலவில்லை என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.