ஆபரேஷன் சக்சஸ்… ஆனா… வயிற்றில் அடித்துக் கொள்ளும் மு.க.ஸ்டாலின்..!

 

ஆபரேஷன் சக்சஸ்… ஆனா… வயிற்றில் அடித்துக் கொள்ளும் மு.க.ஸ்டாலின்..!

18 தொகுதிகளிலும் அந்தந்த திமுக வேட்பாளர்கள் மூலமாக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் இப்போது ராதாபுரம் போல ஒரு முடிவை நோக்கி வந்திருக்கும்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அ.தி.மு.க ஆட்சி மீண்டும் தொடர்வது உறுதியானது. ஆனால், ராதாபுரம் தொகுதியின் முடிவுகள் மட்டும் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி இருந்துகொண்டே இருந்தது.

\inbadurai

இறுதியாக, ‘அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி’ என்ற அறிவிப்பை வெளியிட்டார், தேர்தல் அலுவலர். அன்றைய தேர்தல் முடிவுகளில் மிகக்குறைந்த வாக்குகளில் வெற்றிபெற்ற உறுப்பினர் என்ற பெருமையோடு சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார், இன்பதுரை. அதேநேரம் தனது வெற்றியைத் திட்டமிட்டுப் பறிக்கவே தபால் ஓட்டுகளில் 262 ஓட்டுகளைச் செல்லாத ஓட்டுகளாக்க அறிவித்துள்ளது என்று நீதிமன்றத்தின் படியேறினார், அப்பாவு. இந்த வழக்கில்தான் மறு எண்ணிக்கை என்ற பரபரப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தியாவில் எத்தனையோ தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளுக்குப் பல ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வந்துள்ளன. ஆனால், ராதாபுரம் தொகுதி விவகாரத்தில்தான் உறுப்பினர் பதவியில் இருந்த காலத்திலே மறுவாக்கு எண்ணிக்கை இந்தியாவில் முதல்முறையாக நடந்துள்ளது. 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக 500 வாக்குகள் குறைவாக ஐந்து தொகுதிகளிலும், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதிகளிலும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாக்குகள் இடைவெளியில் நான்கு தொகுதிகளிலும் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆக 18 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அப்போது கடைசி நேரத்தில் சூறையாடப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.

vote

இந்த வாக்கு எண்ணிக்கையின் கடைசிகட்ட நிலவரத்தை திமுக வழக்கறிஞர்கள் குழு ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டி திமுக தலைமை கழகத்திடம் அளித்தனர்.

இதன்படி மொத்தம் 18 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவிடம் தோற்காமல் தேர்தல் ஆணையத்திடம் தோற்றதாக திமுகவின் வழக்கறிஞர்கள் கட்சித் தலைமையிடம் கட்டுக் கட்டான ஆதாரங்களை அளித்தனர். தேர்தல் வழக்கு என்பது தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் தொடரப்பட வேண்டும். அந்த வகையில் மேற்கண்ட 18 தொகுதிகளிலும் அந்தந்த திமுக வேட்பாளர்கள் மூலமாக தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் இப்போது ராதாபுரம் போல ஒரு முடிவை நோக்கி வந்திருக்கும். அதுவே ஆட்சி மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணியாக அமைந்திருக்கும்.

stalin

இந்த 18 தொகுதிகள் மட்டுமல்ல திமுக வேட்பாளர்கள் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே மொத்தம் 31 தேர்தல் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து அவற்றை உரிய காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆணைப் பெற்று வழக்குகளை நடத்த வேண்டும் என்ன 2016 சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரக் களத்தை நன்கு உணர்ந்த திமுக வழக்கறிஞர்கள் அப்போதைய தலைவர் கலைஞரிடம் கொண்டு சென்றனர்.

அறிவிக்கப்பட்ட தேர்தல் தோல்வி மற்றும் கலைஞரின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை காரணமாக அந்த நேரத்தில் இதுபற்றி தலைமை உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்ட நிலையில் ராதாபுரம் வேட்பாளர் அப்பாவு தொடுத்த வழக்கு மட்டும் இன்று வளர்ந்து இந்தியாவிலேயே மறு வாக்கு எண்ணிக்கை தீர்ப்பை பெற்று தந்த முதல் வழக்காக மாறியிருக்கிறது.