ஆன்லைன் மருந்து விற்பனை… இடைக்கால தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம்

 

ஆன்லைன் மருந்து விற்பனை… இடைக்கால தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. காலாவதியான, போலியான மருந்துகள் விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது. மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் விற்கப்படுகின்றன. எனவே இதனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவை கடந்த அக்டோபர் மாதம் விசாரித்த  உயர் நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன்பின், கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனவும், ஜனவரி 31-ம் தேதிக்குள் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில் இந்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், வருகின்ற ஜனவரி 31-ம் தேதிக்குள் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய விதிகள் வகுக்கும் வரை ஆன்லைனில் மருந்தை விற்கலாம் என கூறி ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கபட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.