ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெண்.. பாதுகாப்பு கேட்டு மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம் !
ஈரோடு மாவட்டத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஓரினச் சேர்க்கை சரி என்று சட்டம் வந்த பிறகும் பல திருமணங்கள் வீட்டாரின் எதிர்ப்புகளுடனே நடந்து வருகின்றன. அதனை ஏற்றுக் கொள்ள முடியாத பெற்றோர்கள் ஆணாக மாறும் பெண்ணையும், பெண்ணாக மாறும் ஆணையும் திருமணம் செய்து வைக்க மறுக்கின்றனர். எதிர்ப்பை மீறி நடந்த பல ஓரினச் சேர்க்கை திருமணங்கள் அடி உதையுடன் முடிந்த பல கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்நிலையில் அதே போல ஈரோடு மாவட்டத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்த போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் இவரது காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். படிப்பு முடிந்ததும் இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளப் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களது பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி சிவா- அகிலா ஈரோட்டில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எப்படியும் அவர்களது உறவினர்கள் தங்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணிய இவர்கள் பாதுகாப்பு கேட்டு மதுரை திருநங்கை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதன் பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகள் மதுரை நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி, இரண்டு பேரும் மதுரை நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்துள்ளனர்.