ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா : அதிமுகவுக்கு இரட்டை தலைமை வேண்டாம்; அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!
இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மதுரை: இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தோல்வியின் எதிரொலியைத் தொடர்ந்து அதிமுக தலைமையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ், எடப்பாடியை வீழ்த்த ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக நாளுக்கு நாள் செய்திகள் வெளியாகி அதிமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அமைச்சர் பதவி கேட்டு தோப்பு வெங்கடாச்சலம் போன்ற எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதால் படுஅப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, ‘தேர்தலில் கட்சி ஏன் தோல்வியடைந்தது என்றால் தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. தொண்டர்களிடம் கருத்து கேட்டு யாரும் செயல்படவில்லை. இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது. மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் உள்ளவர் அ.தி.மு.க தலைவராக வேண்டும். இது என்னுடைய கருத்தோ குறையோ அல்ல. தொண்டர்களின் மனநிலை அதுவாகத்தான் இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் தற்போது இல்லாததாதல் தான் தோல்வி அடைந்துள்ளோம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9எம் எல்ஏக்களும் ஏன் இன்னும் அம்மா சமாதிக்கு சென்று ஆசி பெறவில்லை. அவர்களை யார் தடுப்பது? இதையெல்லாம் கட்சி தலைமை எடுத்து சொல்லாதா? நான் அமைச்சர் பதவிக்காக இப்படிக் கூறவில்லை. கட்சி இன்னும் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சொல்கிறேன்’ என்றார்.
சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படும் நிலையில் அவருக்கு தலைமை பொறுப்பை வழங்க வேண்டும் என்பதே அவரின் ஆதரவாளரான ராஜன் செல்லப்பாவின் திட்டம் என்று கூறப்படுகிறது. அதனால் ஓபிஎஸ் – எடப்பாடியை குறி வைத்து ராஜன் செல்லப்பா இப்படிக் கூறியுள்ளதாக அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை சசிகலா சிறையில் இருந்தே ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரோ?