அ.தி.மு.க எம்.பி. அன்வர்ராஜா வீட்டில் சி.பி.ஐ சோதனை: அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்!
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் அ.தி.மு.க எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ சோதனை செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் அ.தி.மு.க எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ சோதனை செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்.பி. அன்வர்ராஜா
தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக ராமநாதபுரம் அதிமுக எம்.பி. அன்வர்ராஜா இருந்து வருகிறார். இவர் தலைவராக பதவியேற்ற பிறகு, மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரையைச் சேர்ந்த சர்தார் உசேன் என்பவர் இந்த நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள், அன்வர் ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ சோதனை
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரி கார்த்திகை சாமி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதே போல சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதோடு, அங்குள்ள அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவினர் அதிருப்தி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக எம்பி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.