அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுப்பு!!

 

அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுப்பு!!

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்

புதுதில்லி: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவரது அதிகாரங்களை பறித்ததுடன், சிபிஐ இணை இயக்குனர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குனராகவும் மத்திய அரசு நியமித்தது.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உத்தரவிட்டது.

இதையடுத்து, புதுதில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார். தொடர்ந்து, அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நியமனக்குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது.

இதனையேற்று, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் அலோக் வர்மா நீக்கப்பட்டு, மத்திய தீயணைப்புத்துறை குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தனக்கு அளிக்கப்பட புதிய பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.  முன்னதாக, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரம் அற்றவை. தன்னிச்சையான சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ  செயல்பட வேண்டும் எனவும், யாருடையை தலையீடும் இன்றி செயல்பட்டுள்ளேன் எனவும் அலோக் வர்மா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.