அர்ஜுன் மீதான மீ டூ புகார்: நிபுணன் இயக்குநர் விளக்கம்!
நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் அருண் வைத்தியநாதன் விளக்கமளித்துள்ளார்.
பெங்களூரு: நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் அருண் வைத்தியநாதன் விளக்கமளித்துள்ளார்.
உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில், ஏற்கனவே கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, பாடகர் கார்த்திக், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் உள்ளிடோர் சிக்கினர்.
தற்போது அவர்களை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அவர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக புகார் தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#metoo #comingout against all odds. Inspite of the all the comments, backlash and misogyny that will follow, I share my experiences below cos this is about a larger change! Bring it on ! #Speakup men and women . It’s time. pic.twitter.com/xzjA8EnGjR
— sruthihariharan (@sruthihariharan) October 20, 2018
இந்நிலையில், இது குறித்து நிபுணன் பட இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ’அர்ஜுன் சார், ஸ்ருதி ஹரிஹரன் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கு அவர்கள் குடும்பங்களையும் நன்றாகத் தெரியும். அர்ஜுன் சாரைப் பொருத்தவரையில், அவர் ஷூட்டிங்கில் ஒரு ஜென்டில்மேன். நடிப்புக் கலையில் சிறந்த தொழில் நுணுக்கம் அறிந்தவர். ஸ்ருதியும் அப்படியே. அர்ஜுன் சார் மீது ஸ்ருதி கூறியிருக்கும் மீ டூ குற்றச்சாட்டு குறித்து அறிந்து அதிர்ச்சியட்டைந்தேன்.
ஸ்ருதி குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட காட்சி ஒரு நெருக்கமான ரொமாண்டிக் காட்சி. அதற்கு ரிஹர்சல் பார்த்து, அது குறித்து விவாதித்தோம். சில கூடுதல் யோசனைகளை நான் நீக்கினேன். பின்னர் அந்த காட்சியை படமாக்கினோம். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளை இம்ப்ரொவைஸ் பண்ணுவது வழக்கம் தான். அதுபடியே இந்த காட்சியும் எடுக்கப்பட்டது. ஸ்ருதி கூறிய இச்சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பதால் எனக்கு சரியாக நினைவில் இல்லை.
இந்த இடத்தில் இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன். அந்த ரொமாண்டிக் காட்சி, எடுக்கப்பட்டதை விட, எழுதப்படும்போது இன்னும் அன்னியோன்னியமாக எழுதப்பட்டிருந்தது. அர்ஜுன் சார் அதை ஸ்க்ரிப்டிலேயே குறைக்கச் சொன்னார். ‘எனக்கு டீனேஜ் மகள்கள் இருக்கிறார்கள். நான் இனிமேலும் அப்படியான காட்சிகளில் நடிக்க முடியாது‘ என்றார். அதைப் புரிந்துகொண்டு மாற்றி அமைத்தேன்.
ஷூட்டிங் மற்றும் மாற்றி எழுதியது பற்றி நான் கூறிய விவரங்கள் நடந்த உண்மையான நிகழ்வுகள். எனது பட ஷூட்டிங்கிற்கு வெளியே அல்லது தனிப்பட்ட முறையில், தொலைப்பேசி அழைப்பு, சாட் என இருவருக்குள் நடந்த விஷயங்கள் பற்றி என் கவனத்துக்கு புகாராக வந்தால் மட்டுமே என்னால் அதுபற்றி பேச முடியும். இல்லையென்றால் அதைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது.
தனிப்பட்ட முறையில் அர்ஜுன் சாரும், ஸ்ருதியும் எனது நல்ல நண்பர்கள். படத்தை எடுக்கும்போது ஒரு குழுவாக, நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மகிழ்ச்சியுடன் எடுத்தோம். அதனால் இந்த அறிக்கையை பதிவு செய்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மீ டூ இயக்கம் தொடர்பாக – எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலைக் கொண்டு வரவே நாங்கள் விரும்புகிறோம். இது பற்றி எனக்கு கால் செய்தோ, மெசேஜ் செய்தோ தொந்திரவு தர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.