அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தாக்குதல்: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு-வீடியோ

 

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தாக்குதல்: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு-வீடியோ

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாஜக-வினர் மீது ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாஜக-வினர் மீது ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். கெஜ்ரிவாலுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், துணை நிலை ஆளுநர், மாநில அரசிற்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனவும் குற்றச்சட்டுக்களை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், மதிய உணவிற்காக கெஜ்ரிவால் புறப்பட்ட போது, அவரை சந்திக்க வந்த நபர், புகார் மனுவை அவரிடம் அளித்தார். பின்னர், முதல்வரின் காலை பிடிப்பது போல சென்ற அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து கெஜ்ரிவாலின் முகத்தில் பூசினார்.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே, இச் சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையை கையில் வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு மீது ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.