அரசு விழாவில் போட்டி போட்டு தூங்கிய அமைச்சரும், கலெக்டரும் – வீடியோ
திண்டுக்கல்: அரசு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழியும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதிமுக அமைச்சர்கள் என்றாலே தற்போது சர்ச்சைக்குட்பட்டவர்கள், கிண்டலுக்குட்பட்டவர்கள் என்று பொருளாகி இருக்கிறது. செல்லூர் ராஜூவில் ஆரம்பித்த இவ்விவகாரம் தற்போது திண்டுக்கல் சீனிவாசன் வரை வந்து நிற்கிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது,ஜெயலலிதா கொள்ளையடித்தார் என பேசியது, உதவியாளரை வைத்து தனது காலணியை சரிசெய்ய வைத்து என அவரது நடவடிக்கைகளும் பேச்சும் தொடர்ந்து சர்ச்சைக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூட்டுறவு துறை சார்பில் பல்பொருள் அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும், கலெக்டர் வினய் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஆனால் விழா நடந்துகொண்டிருந்தபோது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறு சலனனுமின்றி அமர்ந்திருந்தார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் உற்று கவனித்தபோது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரியவந்தது. அதேபோல் கலெக்டரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
இதனால் விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். களைப்பால் இருவரும் உறங்கிவிட்டார்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி சமாளித்தாலும், மக்கள் கூடியிருக்கும் அரசு விழாவில் அமைச்சரும், கலெக்டரும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு உறங்கி இருக்கக்கூடாது என பலர் கூறுகின்றனர்.
தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதேசமயம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே உறங்கினார். உறக்கம் என்பது இயற்கையான விஷயம் என அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.