அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் – நாய் கடித்த நிலையில் மீட்பு

 

அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் – நாய் கடித்த நிலையில் மீட்பு

மருத்துவமனை ஒன்றில் இறந்த குழந்தையின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் குப்பையில் வீசிய கோர சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கர்னுர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மா. இவர் பிரசவத்திற்காக நேற்று காலை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பிரசவத்திற்கு பிறகு குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததால் அவர்கள் குழந்தையை ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி குழந்தை ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் குழந்தை நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

infant

நடுராத்திரி என்பதால் செய்வதறியாது திகைத்த குழந்தையின் பெற்றோர், குழந்தையின் சடலத்தை ஒரு பையில் சுற்றி வைத்திருந்தனராம். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்கள், குழந்தை சடலத்தை கையில் வைத்துக் கொண்டு இங்கே உட்காராதீர்கள், வெளியே போங்கள் என கூறியுள்ளனர். இதனால் அவர்கள் குழந்தையின் சடலத்தை கழிவறை அருகே வைத்துள்ளனர். 

பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது குழந்தை அங்கே  இல்லை. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது, தெரியாமல் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி விட்டதாக கூறியுள்ளனர். 

குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தபோது,  நாய்க்கடி பட்டு குழந்தை உடம்பில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த பொறுப்பற்ற செயலால் அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.