அரசியலில் இருந்து மோடியை அகற்ற காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் இணைந்து சதி – பாஜக குற்றச்சாட்டு

 

அரசியலில் இருந்து மோடியை அகற்ற காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் இணைந்து சதி – பாஜக குற்றச்சாட்டு

அரசியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தானும் விரும்புவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லி: அரசியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தானும் விரும்புவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ரபேல் முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களில் காங்கிரஸ் – பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ராகுல் காந்தி பெரிய தலைவராக வர வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். அவர்கள் யார் என்றால் பாகிஸ்தான் நாட்டு அரசியல்வாதிகளே ஆவர். மேலும், அவர்கள் ஊழல், வாரிசு அரசியலுக்கு துணை நிற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தான் தலைவர்களுக்கும் ஒரே குறிக்கோள்தான். அது மோடியை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே ஆகும். ஆனால், ஏழை மக்கள் மோடியின் பின்னால் நிற்கின்றனர். அவரை அரசியலில் இருந்து அகற்ற முடியாது. எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிரான தங்களது மெகா கூட்டணியில் பாகிஸ்தானையும் இணைத்துள்ளது” என்றார்.