அயோத்தியில் 5 ஏக்கர் மசூதி இடத்தில் நூலகம், மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள்….. சன்னி மத்திய வக்பு வாரியம் தகவல்…

 

அயோத்தியில் 5 ஏக்கர் மசூதி இடத்தில் நூலகம், மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள்….. சன்னி மத்திய வக்பு வாரியம் தகவல்…

அயோத்தியில் மசூதி கட்ட உத்தரப் பிரதேச வழங்கிய 5 ஏக்கர் மாற்று இடத்தில் மசூதியுடன் தொண்டு மருத்துவமனை மற்றும் பொது நூலகம் உள்ளிட்ட வசதிகள் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.

பல பத்தாண்டுகளாக முடியாமல் இழுத்து கொண்டியிருந்த பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம். முஸ்லிம்கள் மசூதி கட்டி கொள்ள 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அயோத்தியில் முஸ்லிம்கள் மசூதி கட்டி கொள்ள 5 ஏக்கர் மாற்று இடத்தை உத்தரப் பிரதேச அரசு அண்மையில் வழங்கியது.

ஜூபார் அஹ்மத் பாரூகி

இந்நிலையில் நேற்று உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியத்தின் கூட்டம் அதன் தலைவர் ஜூபார் அஹ்மத் பாரூகி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அரசு வழங்கிய மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஜூபார் அஹ்மத் பாரூகி கூறியதாவது: 5 ஏக்கர் நிலத்தில் மசூதியில் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

மசூதி கட்டுவதற்கான மாற்று இடம்

மேலும் அந்த இடத்தில் மசூதியுடன் தொண்டு மருத்துவமனை, பொது நூலகம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும். பல நூற்றாண்டுகளின் இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரத்தை வெளிப்படுத்த ஆராய்ச்சி மையம் கட்டப்படும். மேலும் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படும். புதிய மசூதி பாபர் மசூதி என அழைக்கப்படுமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அறக்கட்டளை அமைத்த பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.